கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவதே முதன்மையான நற்செய்திப் பணி - Mandalay
பேராயர்
ஜூன்,07,2012. தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவதே மியான்மாரில் உள்ள
கத்தோலிக்கர்கள் மேற்கொள்ளக்கூடிய முதன்மையான நற்செய்திப் பணி என்று Mandalay உயர்மறைமாவட்டத்தின்
பேராயர் Paul Zingtung Grawng, கூறினார். கடந்த பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சியால் கட்டுண்டு
கிடக்கும் மியான்மாரில் மக்களாட்சியை நோக்கிச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வரும் வேளையில், அந்நாட்டின் சமுதாய மாற்றங்களுக்குக் கத்தோலிக்கர்கள் பெருமளவில் உதவிகள்
செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் பேராயர் Zingtung Grawng. கல்வி, நலப்
பணிகள், வழியாக கிறிஸ்தவர்கள் செய்து வரும் பணிகளை மியான்மார் சமுதாயம் நன்கு உணர்ந்துள்ளது
என்று கூறிய பேராயர் Zingtung Grawng, ஆழமான விசுவாச வாழ்வு வாழ்வதாலும், திருவழிபாடுகளில்
ஈடுபடுவதன் மூலமும் மக்கள் தங்கள் அயலாருக்குக் கிறிஸ்துவை எடுத்துரைக்கமுடியும் என்று
கூறினார். மியான்மாரில் 90 இலட்சம் மக்களைக் கொண்டுள்ள Mandalay உயர்மறைமாவட்டத்தில்
24,000 கத்தோலிக்கர்கள் 30 பங்குத் தளங்களில் வாழ்கின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.