ஜூன்04,2012. “ஒரு மனிதர் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
ஆனால் அவருக்கு குடும்பம் இருந்தால் எனக்கு அவர் செல்வந்தர்”. இப்படி ஓர் அறிஞர் சொன்னார்.
ஒரு சமுதாயத்தின் ஆணிவேராக அமைந்திருக்கும் குடும்பத்தின் இலக்கணம், அதன் அருமை பெருமைகள்
பற்றி வலைத்தளத்தில் தேடினால், அவற்றை இப்போதைக்கு எழுதி முடிக்க முடியாது. இக்காலத்தில்
வளர்ந்த மற்றும் பல வளரும் நாடுகளில் பாரம்பரியக் குடும்பப் பண்பாடுகள் மறைந்து வருகின்றன.
கத்தோலிக்கத் திருஅவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு நாட்டில் அனைத்துலக குடும்ப
மாநாட்டை நடத்தி உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்புமாறு வலியுறுத்தி வருகிறது. இந்த
2012ம் ஆண்டு இந்த மே 30 முதல் ஜூன் 3 வரை இத்தாலி நாட்டு மிலான் நகரில் ஏழாவது அனைத்துலக
குடும்ப மாநாட்டைத் திருஅவை நடத்தியது. திருப்பீட குடும்ப அவை, மிலான் உயர்மறைமாவட்டத்தோடு
இணைந்து இந்த மாபெரும் குடும்ப விழாவை நடத்தி முடித்துள்ளது. இம்மாட்டுக்குத் தயாரிப்புக்கள்
தொடங்கிய நாளிலிருந்து இம்மாநாட்டின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு வரை பல திருஅவைத் தலைவர்கள்
குடும்பங்கள், திருமணங்கள், குழந்தைவளர்ப்பு, குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
போன்றவை குறித்துப் பேசினர். இந்தக் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை
மிலான் சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டும் மூன்று நாள்களாக, ஆழமான கருத்துக்களை அழுத்தமாக
எடுத்துச் சொன்னார். இஞ்ஞாயிறன்று மிலான், Bresso பெரியதொரு திறந்தவெளியில் இம்மாநாட்டு
நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தினார். சுமார் 150 நாடுகளிலிருந்து சுமார் பத்து இலட்சம்
விசுவாசிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியின் இறுதியில் மூவேளை செபம் சொல்வதற்கு முன்னர்,
அடுத்த அனைத்துலக குடும்ப மாநாடு அமெரிக்க ஐக்கிய நாட்டு பிலடெல்பியாவில் 2015ம் ஆண்டு
நடைபெறும் என அறிவித்தார். இந்த அனைத்துலக குடும்ப நிகழ்வை நடத்துவதற்கு இசைவு தெரிவித்த
பிலடெல்பியா பேராயர் சார்லஸ் சாட்புட் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மிலான், இந்நகர்
அமைந்துள்ள லொம்பார்தியா மாநிலம், இத்தாலி, இன்னும் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்து
வந்து இந்த மிலான் குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பெருந்துன்பங்களை அனுபவிக்கும் குடும்பங்களுடன் எப்பொழுதும்
தோழமையுணர்வு கொண்டு வாழுமாறும், பொருளாதார-சமூக நெருக்கடியாலும், இத்தாலியின் எமிலியாப்
பகுதியில் அண்மையில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் தான் இந்நேரத்தில் சிறப்பாக
நினைப்பதாகவும் கூறினார். நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்குப்
பணக்காரக் குடும்பங்கள் உதவுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். “குடும்பம்: வேலையும்,
கொண்டாட்டமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் குடும்ப விழா நிறைவுத் திருப்பலியின்
மறையுரையில் திருத்தந்தை வலியுறுத்திய கருத்துக்களின் சுருக்கத்தைக் கேட்போம். மூவொரு
கடவுளின் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று அவ்விழாப் பேருண்மையை வைத்து மறையுரையைத் தொடங்கினார்.
(திருத்தந்தை-திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பம் உலகை மாற்ற முடியும்)
முதல் குடும்பமாகிய
தூய திருத்துவத்தின் தனித்தன்மை, திருஅவைச் சமூகங்களைக் குடும்பங்களாகக் கட்டியெழுப்ப
அழைக்கின்றது. இந்தக் குடும்பங்கள் மூவொரு இறைவனின் அழகைச் சிந்தித்து, அதனை வார்த்தைகளால்
அல்ல, மாறாக, அன்பை வாழ்வதில் “ஒளிக்கதிர்களாக” வெளிப்படுத்த அழைக்கின்றது. திருஅவை மட்டுமல்ல,
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்
குடும்பமும், மூன்று ஆள்களாக இருக்கும் ஒரே கடவுளின் சாயலாகத் திகழ்வதற்கு அழைக்கப்படுகின்றது.
திருமணமான அன்புத் தம்பதியரே, நீங்கள் உங்களது திருமணத்தை வாழும்போது ஒருவருக்கொருவர்
ஏதோ குறிப்பிட்ட ஒருபொருளை அல்லது செயலை வழங்குவதில்லை, ஆனால் உங்களது முழுவாழ்வையுமே
வழங்குகிறீர்கள். உங்களது ஆசைகள், ஒருவர் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்றல், கொடுப்பதிலும்
பெறுவதிலும் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றால் உங்களது அன்பு, முதலும் முக்கியமுமாக
உங்களுக்கே பயனுள்ளதாக இருக்கின்றது. உங்களது பிள்ளைகளைப் பொறுப்புடனும் தாராளமனத்துடனும்
பெற்றெடுத்து அவர்களது நலனில் அக்கறை காட்டி ஞானம் நிறைந்த கல்வியை அளிப்பதிலும் இது
பயன்மிக்கதாக இருக்கின்றது. மனிதரை மதித்தல், நன்றிமனப்பான்மை, நம்பிக்கை, பொறுப்பு,
ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு போன்ற சமூகப் பண்புகளின் முதல் கல்விக்கூடமாகவும் குடும்ப வாழ்வு
அமைந்துள்ளதாலும் இது பயனுள்ளதாக இருக்கின்றது. அன்புத் தம்பதியரே, தொழில்நுட்பத்தால்
ஆக்ரமிக்கப்பட்ட இன்றைய உலகில் உங்களது பிள்ளைகள்மீது கண்ணும் கருத்துமாய் இருந்து, சலனமற்ற
மனநிலை மற்றும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான அர்த்தங்களையும், விசுவாசத்தின் வல்லமையையும்
அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உயர்ந்த இலட்சியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களது
பலவீனங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். குடும்பங்களாக இருப்பதென்பது, கடவுள் உறவில்
தொடர்ந்து நிலைத்திருந்து, திருஅவையின் வாழ்க்கையில் பங்கு கொள்வதாகும். அதாவது, உரையாடலை
வளர்த்து, ஒருவர் ஒருவரின் கண்ணோட்டத்தை மதித்து, சேவை செய்வதற்குத் தயாராக இருந்து,
பிறர் தவறும்போது பொறுமை காத்து, பிறரை மன்னித்து, மன்னிப்புக் கேட்டு, மோதல்கள் ஏற்படும்போது
அறிவு மற்றும் பணிவால் அவற்றைச் சமாளித்து, பிற குடும்பங்களுக்குத் திறந்த மனதாக இருந்து,
ஏழைகள்மீது அக்கறை காட்டி, சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்களாய் வாழ்வதாகும். இவ்வாறு
உரையாற்றிய திருத்தந்தை, திருமணமுறிவு பெற்றவர்கள் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியரையும்
மறந்து விடாமல், அவர்களது போராட்டங்களில் திருத்தந்தையும் திருஅவையும் உடன் இருப்பதாகத்
தெரிவித்தார். இவர்கள், குடும்பம் குறித்த திருஅவையின் போதனைகளை ஏற்றுக்கொண்டாலும், இந்தப்
பிரிவுகளின் வேதனையான அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள் என்று உரைத்து கடவுள் சாயலில் மனிதர்
இருப்பதன் பொருளையும் விளக்கினார். கடவுள் சாயலில் ஆண்
மற்றும் பெண்ணாக இருப்பது என்பது, வேலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வழியாக
உலகை மாற்றுவதற்கு கடவுளோடு ஒத்துழைப்பதாகும். நவீனப் பொருளாதாரக் கொள்கைகளில் வேலை,
உற்பத்தி மற்றும் சந்தை பற்றிய கருத்தியல், பயன்கருதியதாக இருக்கின்றது. ஆயினும், பயனீட்டுமுறை
மற்றும் அதிகப்படியான இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கூறுகள், நல்லிணக்கமான முன்னேற்றத்துக்கும்,
குடும்பத்தின் நலனுக்கும், நியாயமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சாதமாக இல்லை
என்பதைக் கடவுளின் திட்டமும் நமது அனுபவமும் காட்டுகின்றன. ஏனெனில் இவை அச்சமூட்டும்
போட்டிகளின் எழுச்சியில் சமத்துவமின்மைகளையும், சுற்றுச்சூழல் அழிவையும், நுகர்வுப்பொருள்களில்
போட்டியையும், குடும்பத்தில் பதட்டங்களையும் உருவாக்குகின்றன. உண்மையில் இந்தப் பயன்பாட்டு
மனப்பான்மை, தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளைப் பாதிக்கின்றது, உறுதியான சமூகத்தின்
கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கின்றது, தனிப்பட்டவரின் ஆதாயத்தில் கவனம் குவிகின்றது. அதேபோல்,
கடவுள் சாயலில் மனிதர் இருப்பது, ஓய்வெடுக்கவும் கொண்டாடவும் அழைப்பு விடுக்கின்றது என்று
சொல்லி ஞாயிறு ஓய்வுநாளின் சிறப்பையும் எடுத்துச் சொன்னார் திருத்தந்தை. கிறிஸ்தவர்களாகிய
நமக்கு ஞாயிறு, விழா நாள், ஆண்டவரின் நாள், வார உயிர்ப்பு விழா நாள். இது திருஅவையின்
நாள். இந்நாளில் திருஅவை சமூகம் கூடிவந்து, இன்று நாம் கொண்டாடுவதுபோல, நம் ஆண்டவரின்
தியாகப்பலியை நிறைவேற்றி, திருவார்த்தையைக் கேட்டு, திருநற்கருணை விருந்தில் பங்குகொண்டு,
அவரது அன்பில் நுழைந்து அவரது அன்பால் வாழும் நாளாகும். சேர்ந்து வாழ்வது, நட்பு, தோழமை,
கலாச்சாரம், இயற்கையோடு நெருங்கியிருப்பது, விளையாடுவது ஆகியவற்றைக் கொண்ட மனிதரின் மற்றும்
அவரது விழுமியங்களின் நாளாகும். இது குடும்பத்தின் நாளாகும். இந்நாளில் கூடுதல், கொண்டாடுதல்,
பகிர்தல், திருப்பலியில் பங்கெடுத்தல் ஆகியவற்றைக் குடும்பம் அனுபவிக்கும் நாளாகும்.
அன்புக் குடும்பங்களே, இந்நவீன உலகப்போக்கின் மத்தியில், நம் ஆண்டவரின் நாள் பற்றிய
உணர்வை இழந்துவிடாதீர்கள். பாலைவனச் சோலையில் ஓய்வெடுத்து கடவுளைச் சந்திப்பதில் மகிழ்வு
கண்டு அவர் மீதான தாகத்தைத் தணிப்பதற்கு ஏற்ற நாளாகும். இவ்வாறு மறையுரையாற்றிய
திருத்தந்தை, குடும்பம், வேலை, கொண்டாட்டம் ஆகிய கடவுளின் கொடைகளாகிய இந்த மூன்றும் நமது
வாழ்க்கையில் ஒரு சமத்துவமான நிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும். குடும்பத்தின் தேவைகள்,
தாய்மைப்பேறு காலம், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி வேலைநேரத்தை அமைத்தல் சமூகத்தைக்
கட்டியெழுப்ப இன்றியமையாதவை. இதில், எப்பொழுதும், மனிதருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
என்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார். இந்த ஏழாவது குடும்ப மாநாட்டின் முக்கிய நிகழ்வாக
இச்சனிக்கிழமை மாலை திருத்தந்தை குடும்பங்களின் விழாவிலும் கலந்து கொண்டார். அந்த பிரெஸ்ஸோ
பரந்த மைதானத்தில் சிறார் ஒருபக்கம் விளையாட, இளையோர் இன்னொரு பக்கம் ஆடிபாடிக் கொண்டிருக்க,
ஆயர்களும் குருக்களும் குடும்பத்தினரும் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில்
ஓர் இளம் வியட்நாம் குடும்பத்தினர் முதலில் திருத்தந்தையிடம் சென்றனர். அக்குடும்பத்தின்
Cat Tian என்ற 6 வயதுச் சிறுமி திருத்தந்தையிடம் அவரது சிறுவயது அனுபவம் பற்றிக் கேட்டாள்.
பின்னர் மடகாஸ்கர், கிரீஸ், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளைச்
சேர்ந்த குடும்பத்தினர் திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்டனர். திருத்தந்தையும் பதில்
சொன்னார். இறுதியில் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் நெற்றியில் சிலுவை வரைந்து
அவர்களோடு சேர்ந்து நம் ஆண்டவரின் செபத்தைச் சொன்னார். பின்னர் இக்குடும்பத்தினரும் பிள்ளைகளும்
அந்தந்த நாடுகளின் மரபு ஆடைகளில் அணிவகுத்து மேடையிலிருந்து இறங்கி வந்தனர். இந்த அணிவகுப்பை
எந்த அரசு சாரா நிறுவனமும் எந்த அரசியல் கட்சியும் செய்திருக்க முடியாது, அத்துணை அழகாக
இருந்தது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது. திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்
குடும்பம், இந்த நவீன சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலும். உறுதியான குடும்பங்கள்
உருவாகட்டும்.