அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறுவதையொட்டி, நோயுற்றிருப்போருக்கு சிறப்பான திருப்பலிகள்
ஜூன் 04, 2012. அயர்லாந்தின் டப்ளின் நகரில் அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறுவதையொட்டி,
நோயுற்றிருப்போருக்கு சிறப்பான திருப்பலிகள் அந்நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்
நிகழ்த்தப்படும் என்று டப்ளின் பேராயர் Diarmuid Martin கூறினார். இம்மாதம் 10ம் தேதி
முதல் 17ம் தேதி வரை டப்ளின் நகரில் நடைபெறும் அனைத்துலக திருநற்கருணை மாநாடு, இம்மாநாடு
நடைபெறும் திடல்களைத் தாண்டி மக்களைச் சென்றடைய வேண்டும், முக்கியமாக, மாநாட்டில் கலந்துகொள்ள
முடியாமல் இருக்கும் நோயுற்றோரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சிறப்புத் திருப்பலிகள்
நிகழும் என்று மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்துவரும் அருள்தந்தை Kevin Doran கூறினார். 'திருநற்கருணை:
கிறிஸ்துவோடும் பிறரோடும் உறவு' என்ற மையக்கருத்துடன் திருநற்கருணை மாநாடு கொண்டாடப்படுவதால்,
நாம் கொண்டாடும் உறவில் நோயுற்றோரும் இணைகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கத்துடன்
மருத்துவமனைகளில் திருப்பலிகள் கொண்டாடப்படுகின்றன என்று பேராயர் Martin விளக்கம் அளித்தார்.