மிலான் நகரில் ஆரம்பமான ஏழாவது அகில உலக குடும்ப மாநாட்டின் முதல் நாள்
மே,31,2012. கடவுளின் பிரசன்னத்தில் ஆணும் பெண்ணும் சம மதிப்புடன் உருவாக்கும் ஓர் அழகிய
இல்லமே குடும்பம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். இத்தாலியின் மிலான்
நகரில் இப்புதனன்று ஆரம்பமான ஏழாவது அகில உலக குடும்ப மாநாட்டின் முதல் நாளன்று உரையாற்றிய
திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, ஆபத்துக்களிலும்,
துன்பங்களிலும் இணைந்து வாழும் குடும்பங்களே பாதுகாப்பையும் உணர்கின்றன என்று கூறினார். இம்மாநாட்டிற்குத்
தயாரிக்கும் ஒரு செயல்பாடாக, குடும்பங்களுக்குத் தரப்படும் மதிப்பைப் பற்றிய கருத்துக்கணிப்பு
47 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளில் ஒன்றாக, 47 நாடுகளில்
46 நாடுகள் குடும்பங்களுக்கு முதலிடம் தந்துள்ளன என்ற கருத்து இம்மாநாட்டின் ஆரம்ப நாள்
உரைகளில் எடுத்துரைக்கப்பட்டது. சரிவையும், ஆபத்தையும் சந்தித்து வரும் உலகப் பொருளாதாரம்
மீண்டும் உறுதி பெறுவதற்கு குடும்பங்கள் ஒரு முக்கிய காரணி என்ற கருத்தும் இம்மாநாட்டின்
முதல் நாள் உரைகளில் வெளியாயின என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.