2012-05-29 15:25:42

கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டுவரப்படுமாறு பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்


மே29,2012. பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது என்று அந்நாட்டுக் கிறிஸ்தவ வழக்கறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் குறை கூறியுள்ளனர்.
இந்தப் பெண்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பாகிஸ்தான் அரசையும் இவர்கள் கேட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர் பீட்டர் ஜேக்கப், கிறிஸ்தவ வழக்கறிஞர்களுடன் நடத்திய கூட்டத்தில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டார்.கடத்தல் மற்றும் மதமாற்ற அச்சுறுத்தலில் இப்பெண்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறிய ஜேக்கப், சிறுபான்மை மதங்களைச் சார்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடைசெய்வதற்கு எதிராய்ச் சட்டம் கொண்டுவரப்படுமாறு பாகிஸ்தான் இந்து அவை விடுத்த அழைப்பை உச்சநீதிமன்றம் புறக்கணித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.







All the contents on this site are copyrighted ©.