பொலிவிய ஆயர்கள் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு
மே26,2012. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தைப் பாதுகாக்கவேண்டிய
கடமையை ஒரு நாட்டின் அரசு கொண்டுள்ளது என்று கூறி, ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும்
மசோதாவை உருவாக்க வேண்டாமெனக் கேட்டுள்ளனர் பொலிவிய ஆயர்கள். இந்த மசோதா, பொலிவிய
வரலாற்றிலும் அதன் சமுதாயத்திலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்ற குடும்பத்திற்குப்
பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் எச்சரித்துள்ளனர். ஓர்
ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணம், பொலிவிய அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும்
ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே பாலினத் திருமணங்களை
அங்கீகரிக்கும் மசோதா இன்னும் நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.