கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்குச் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
மே19,2012. கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமியால் பாதிக்கப்படும் பகுதியில் இருப்பதாகக்
கூறி அந்நிலையத்துக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளனர் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தெற்காசிய அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுக்களின் கடிதத்தில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய
பாராளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
அனுப்பியுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும்
மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அக்கடிதத்தில்
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அஹிம்சா வழியில் போராடுவோர் கேள்விகளால் நச்சரிக்கப்படுகின்றனர்,
பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகின்றனர், ஒரு காவல் நிலையத்தில் மட்டும்
50 ஆயிரத்துக்கு அதிகமானோர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.