கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் மருத்துவர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
மே19,2012. மகாராஷ்டிர மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச்
சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்
என அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித் கூறினார்.சென்னை அரசு மருத்துவக்கல்லூரியையும்,
மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக்கல்வி அமைச்சர்
விஜய்குமார் காவித் சென்னை வந்த போது இவ்வாறு கூறினார். சென்னை அரசு பொதுமருத்துவமனை
மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது.
மகாராஷ்டிர மருத்துவமனையில் அதிகமாக 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன என்றார் அவர். தமிழக
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில்
பணிபுரியத் தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது 62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட
உள்ளன என்றும் விஜய்குமார் காவித் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.