மே 16, 2012. கிறிஸ்தவ செபம் குறித்த நம் புதன் மறைபோதகங்களின் தொடர்ச்சியாக இன்று,
புனித பவுலின் போதனைகளில் செபம் குறித்து காணப்படுபவைகளை நோக்குவோம் என தன் மறைபோதகத்தைத்
துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனித பவுலின் மடல்கள் அவருடைய சொந்த செபங்களின்
பல்வேறு வகைப்பாடுகளைக் காட்டி நிற்கின்றன. நன்றியறிவித்தல், புகழ்பாடல், விண்ணப்பம்,
பரிந்துரை போன்றவைகளை உள்ளடக்கியவைகளாக அவை உள்ளன. புனித பவுலைப் பொறுத்தவரையில், செபம்
என்பது அனைத்திற்கும் மேலாக, நம் இதயங்களுக்குள் தூய ஆவியின் செயற்பாடு மற்றும் நமக்குள்ளே
இருக்கும் இறைப்பிரசன்னத்தின் கனியாகும். நம் பல்வீனங்களில் வந்து உதவும் தூய ஆவியானவர்,
இறைமகன் வழியாக இறைத்தந்தையிடம் செபிப்பது குறித்து கற்றுத் தருகிறார். தூய ஆவி நமக்காகப்
பரிந்துரைக்கிறார், கிறிஸ்துவுடன் நம்மை இணைக்கிறார், மற்றும் இறைவனைத் தந்தை என அழைக்கத்
தூண்டுகிறார் என புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடல், பிரிவு 8ல் குறிப்பிடுகிறார்.
இறைக் குழந்தைகளுக்குரிய மகிமைநிறை விடுதலையையும், நம் தினசரி வாழ்வின் துன்பங்கள் மற்றும்
சோதனைகளின்போது இறைவனுக்கு விசுவாசமாக இருப்பதற்குரிய பலத்தையும் நம்பிக்கையையும், நம்மைச்
சுற்றியுள்ள உலகிலும், மற்றவரிலும் இறையாற்றல் செயலாற்றுவதைக் குறித்து கவனமுடன் இருக்கும்
இதயத்தையும் நம் செபங்களில் தூய ஆவி வழங்குகிறார். நம்மோடு இணைந்து செபிக்கும், மற்றும்
மூவொரு கடவுளுடன் ஆழமான அன்பு ஒன்றிப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் தூய ஆவியின் பிரசன்னத்திற்கு
நம் இதயங்களைப் புனித பவுலுடன் இணைந்து திறப்போம். இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை
வழங்கிய திருத்தந்தை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ்,
கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்குத்
தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார். அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய அமைப்பு
முறை மாற்றங்களை வரவேற்பதுடன், அதன் தலைவர் கர்தினால் Oscar Rodríguez Maradiaga, மற்றும்
அந்நிறுவன அங்கத்தினர்களுக்குத் தன் வாழ்த்துக்களை வெளியிடுவதாக கூறினார் பாப்பிறை.
இந்தச் செவ்வாயன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக குடும்ப நாள் குறித்தும் இப்பொதுமறைபோதகத்தின்போது
எடுத்துரைத்தார் திருத்தந்தை. 'குடும்பம் மற்றும் வேலை' என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்ட
இந்நாளின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வேலை என்பது ஒருநாளும்
குடும்பங்களுக்கு இடையூறு தருவதாக இருக்கக் கூடாது, மாறாக, குடும்பத்திற்கு பலம் தருவதாகவும்,
ஒன்றிப்பை வழங்கி உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்றார். பொதுமறைபோதகத்தின் இறுதியில்
அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.