திருத்தந்தை மிலான் உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின்
விவரங்கள்
மே,16,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வருகிற ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து
3ம் தேதி வரை மிலான் உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின்
விவரங்களை இச்செவ்வாயன்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டது. இந்தப் பயணத்தின்
ஒரு மிக்கிய அங்கமாக, மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் 7வது அனைத்துலக மாநாட்டின்
நிறைவுத் திருப்பலியைத் திருத்தந்தை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன்
மாதம் முதல் தேதி வெள்ளியன்று மாலை மிலான் நகர் சென்றடையும் திருத்தந்தை, அன்றிரவு 7.30
மணிக்கு அகில உலக குடும்பங்களின் மாநாட்டு பிரதிநிதிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். மிலான் நகரில் புதிதாக உறுதிப்பூசுதல் பெற்றுள்ள
சிறுவர் சிறுமிகளைச் சனிக்கிழமையன்று காலை சந்திக்கும் திருத்தந்தை, மாலையில் மிலான்
நகர அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரை வழங்குவார். இப்பயணத்தின் இறுதி நாளான ஞாயிறன்று
மாநாட்டின் சிறப்புத் திருப்பலியாற்றும் திருத்தந்தை, மதியம் கர்தினால்கள், ஆயர்கள்,
மாநாட்டினை ஏற்பாடு செய்வோரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றுவார். வெள்ளியன்று
மாலை 4 மணிக்கு உரோம் நகரின் சம்பினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை,
மிலான் உயர்மறைமாவட்டத்தில் நடைபெறும் பல பொது நிகழ்வுகளில் பங்கேற்றபின், ஜூன் மாதம்
3ம் தேதி, ஞாயிறு மாலை 5.30 மணியளவில் மீண்டும் உரோம் நகர் வந்தடைவார்.