கத்தோலிக்க மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் நடத்தும் இரு சிறப்பான நிகழ்வுகள்
மே,16,2012. ஒலிம்பிக் போட்டிகளும், மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளும் இலண்டன்
மாநகரில் நடைபெறவிருப்பதையொட்டி, அந்நாட்டின் கத்தோலிக்க மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர்
ஒன்றிணைந்து இரு சிறப்பான நிகழ்வுகளை நடத்த உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உண்டு
(EveryBody Has a Place) என்ற மையக்கருத்துடன் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று
ஜூலை மாதம் 2ம் தேதியன்று இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மைய அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப்
போட்டிகள், மாற்றுத் திறன், இறையியல் ஆகிய கோணங்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இக்கருத்தரங்கில்
பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, மாற்றுத் திறனாளிகளைச்
சிறப்பிக்கும் ஒரு தேசிய நாள் ஜூலை மாதம் 8ம் தேதி கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போர்களில்
ஈடுபட்டிருந்த இளையோரை ஒருங்கிணைக்க பழமைக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் உருவாக்கப்பட்டன
என்பதில் பொதிந்துள்ள ஆழமான உண்மையை நாம் இன்று மீண்டும் உணர்வதற்கு இலண்டன் ஒலிம்பிக்
போட்டிகள் உதவவேண்டும் என்பதே இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையின் குறிக்கோள்
என்று ஒலிம்பிக் போட்டிகளுடன் பல்வேறு கத்தோலிக்க நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வரும் James
Parker கூறினார்.