அக்டோபர் மாதம் துவங்கவுள்ள விசுவாச ஆண்டு நம் விசுவாத்தை மீண்டும் புதுப்பிக்க நல்லதொரு
தருணம் - ஹாங்காங் பேராயர்
மே,16,2012. இரண்டாம் வத்திக்கான் பேரவையின் 50ம் ஆண்டு நிறைவாக, வருகிற அக்டோபர் மாதம்
துவங்கவுள்ள விசுவாச ஆண்டும், கத்தோலிக்க மறைகல்வித் தொகுப்பு வெளியிடப்பட்டதன் 20 ஆண்டு
நிறைவும் நம்மிடையே விசுவாத்தை மீண்டும் புதுப்பிக்கத் தரப்பட்டுள்ள நல்ல தருணங்கள் என்று
ஹாங்காங் பேராயர் கர்தினால் John Tong Hon கூறினார். ஹாங்காங் பகுதியில் இவ்வாண்டு
உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, 3400க்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில்
800 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தை அண்மையில் சந்தித்து உரையாற்றிய கர்தினால் Tong Hon இவ்வாறு
கூறினார். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தில் இன்னும் ஆர்வமாக ஈடுபடுவது நமது விசுவாசத்தை
வளர்க்கும் ஒரு சிறந்த வழி என்றும் கர்தினால் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் கலந்து
கொண்டவர்கள் தங்களுக்கு மறைகல்வி புகட்டியவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு, திருஅவையின்
விசுவாசப் பயணத்தில் தொடர்ந்து தாங்களும் இணைவதாக வாக்களித்தனர் என்று Fides செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.