மே12,2012. மே 15, வருகிற செவ்வாயன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலகக் குடும்ப தினத்தை
முன்னிட்டு, “குடும்பம்” குறித்து தியானிக்கும் செபவழிபாடு ஒன்றை வெளியிட்டுள்ளது பன்னாட்டு
பெண் துறவு சபை அதிபர்கள் கழகம். கடவுள் குடும்பமாக இருப்பது, வாழ்வு கொடுக்கும் கடவுளோடு
இருக்கின்ற உறவு, படைத்த கடவுளின் அன்பு, கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகியிருக்கும்
விண்மீன் கூட்டங்கள், விண்கோள்கள், உலகளாவியக் குடும்பம், குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள்
எனப் பல கோணங்களில் சிந்தித்து தியானிப்பதற்கு இச்செபம் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 1993ம்
ஆண்டு ஐ.நா.பொது அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்துலகக் குடும்ப தினம்
ஆண்டுதோறும் மே 15ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. மேலும், கருக்கலைப்பு சட்டரீதியாகத்
தடை செய்யப்பட வேண்டும் மற்றும் சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் சுவர்கள் சிறார் என்பதை
அரசு அதிகாரிகள் மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கானடா நாடாளுமன்றத்தின் முன்பாக சுமார்
இருபதாயிரம் பேர் போராடியுள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.