மே 11,2012. கத்தோலிக்கத் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்படாமலே, புனிதர் பட்டியலில்
ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் ஜெர்மனியின் Bingen நகர் புனிதர் Hildegardஐ, அதிகாரப்பூர்வமாகப்
புனிதர் என இவ்வியாழனன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருப்பலி மற்றும்
சிறப்புத் திருப்பலி வாசகங்களோடு புனிதர் Hildegardன் திருவிழா நாளைச் சிறப்பிக்கலாம்
என்றும் திருத்தந்தை அறிவித்தார். பெனடிக்ட் தியான யோக துறவு சபையின் 12ம் நூற்றாண்டு
புனிதை Hildegard ஐ புனிதராக அங்கீகரித்த அதேநாளில், சிலரை அருளாளர்கள் மற்றும் புனிதர்களாக
உயர்த்தப்படுவதற்கும் திருத்தந்தை ஒப்புதல் அளித்தார். இஸ்பானிய உள்நாட்டுப் போர்
மற்றும் நாத்சி அடக்குமுறைகளில் உயிரிழந்த 37 மறைசாட்சிகள், இன்னும், புனிதர் நிலைக்கு
உயர்த்தப்படுவதற்கான 12 அருளாளரின் உயரிய பண்புகள், அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற
இரண்டு புதுமைகள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளித்தார் திருத்தந்தை. கியூபா நாட்டு
Felix Varela, துறவு சபைகளைத் தொடங்கிய இரண்டு இஸ்பானியர்கள், அமெரிக்கரான Miriam Teresa
Demjanovich, சுலோவேனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் Irenaeus
Frederick Baraga போன்றோரும் இவர்களில் உள்ளடங்குவர்.