இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட
முடிவு
மே 11,2012. இலங்கையில் இனப் பிரச்சனைக்கானத் தீர்வை விரைவுபடுத்தும் விடயத்தில் இந்தியாவும்
அமெரிக்காவும் ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப்
பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க
வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடைபெற்ற
சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்
அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சனை விடயத்தில் இனிவரும் காலங்களில் இருநாடுகளும் இணைந்து
பணியாற்றுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைப்பதற்கு வழி ஏற்படுத்துவது
எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கானப் பேச்சுகளைத்
துரிதப்படுத்துவதற்கும், தமிழ் அரசியல் கட்சிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வருவது
தொடர்பாக, பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கும் இவ்விருநாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்
என்று சொல்லப்ப்டடுள்ளது.