2012-05-10 15:34:10

கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி - திருப்பீடத் தூதர்


மே,10,2012. கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி என்பதை ஆந்திரத் தலத்திருஅவை உணர்ந்து, ஏழை மக்களுடன் இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio, கூறினார்.
ஆந்திரத் தலத்திருஅவை உருவாகி 300 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, இச்செவ்வாயன்று விஜயவாடாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தலைமையேற்று உரையாற்றிய பேராயர் Pennacchio, இவ்வாறு கூறினார்.
இம்மாநாட்டின் திருப்பலியிலும், பொது அமர்விலும் தலைமையேற்ற பேராயர் Pennacchio, திருத்தந்தையின் தனிப்பட்ட ஆசீரையும், வாழ்த்துக்களையும் கூடியிருந்தோருக்கு வழங்கினார்.
உலகின் பல நாடுகளில் எழுந்துள்ள மறைபணித் தேவைகளை நிறைவேற்ற ஆந்திரத் தலத்திருஅவை அருள் பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் பேராயர் Pennacchio.
செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆந்திர மாநிலத்தின் 13 மறைமாவட்டங்களில் பணியாற்றும் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் என்று 1500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.