2012-05-09 15:37:55

இயேசு சபை அருள்தந்தை கலில் சமீர் - அரேபிய வசந்தம் முடிந்துவிட்டது


மே,09,2012. அரேபிய வசந்தம் முடிந்துவிட்டது என்று மத்தியக் கிழக்குப் பகுதிகளைக் குறித்து கற்றறிந்து தற்போது கீழைரீதி பாப்பிறை நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் இயேசு சபை அருள்தந்தை Samir Khalil Samir கூறினார்.
அரேபியாவின் பல நாடுகளில் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் திரண்டு வந்த மக்கள் சக்தியால் உருவான விடுதலைப் போராட்டங்கள், தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன என்று எகிப்து நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை Khalil Samir, CNA என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
எகிப்து, லிபியா, துனிசியா ஆகிய அரேபிய நாடுகளில் மக்கள் போராட்டத்தால் குடியரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போது இந்நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கத்தையே அதிகம் உணர முடிகிறது என்ற தன் ஏமாற்றத்தை அருள்தந்தை Khalil Samir தன் பேட்டியில் வெளியிட்டார்.
பெண்களே அமைதியை அதிகம் விரும்பும் மனம் கொண்டவர்கள் என்பதால், இந்நாடுகளில் நிரந்தரமான, சுதந்திரமான குடியரசுகள் உருவாக பெண் கல்வி மிகவும் முக்கியம் என்பதை அருள்தந்தை Khalil Samir சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.