மே 02, 2012. இத்தாலியில் குளிர் காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடைப்பட்ட ஒரு காலநிலை
நிலவி வரும் சூழலில், திருத்தந்தையின் இவ்வாரப் புதன் பொது மறைபோதகம் புனித பேதுரு பசிலிக்காப்
பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கிறிஸ்தவ செபம் குறித்த தன் மறைபோதகத்தை இப்புதனன்றும்
தொடர்ந்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். திருஅவையின் முதல் மறைசாட்சியாகிய புனித ஸ்தேவான்
உயிரிழப்பதற்கு முன் வழங்கிய அருளுரைக் குறித்து இன்று நோக்குவோம். இறைவார்த்தையின் ஒளியில்
கிறிஸ்துவின் வாழ்வு நிகழ்வைச் செப உணர்வில் மீண்டும் வாசிப்பதில் தெளிவான அடிப்படையைக்
கொண்டதாக புனித ஸ்தேவானின் வார்த்தைகள் இருந்தன. இயேசு எருசலேம் கோவிலையும் மோசே வழங்கிய
சட்டங்களையும் தகர்த்து அழிப்பார் என எடுத்துரைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்தேவான்,
இறைவாக்கினர்களால் முன்னுரைக்கப்பட்ட நேர்மையாளர் இயேசுவே எனவும், அந்த இயேசுவிலேயே இறைவன்
தனிச்சிறப்பான மற்றும் நிரந்தரமான முறையில் மனித குலத்திற்கென பிரசன்னமாயிருக்கிறார்
எனவும் பறைசாற்றினார். மனிதனாக உருவெடுத்த இறைமகன் இயேசுவே இவ்வுலகில் இறைவனின் திருக்கோவில்.
நம்முடைய பாவங்களுக்காக உயிரிழந்து புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழுந்ததன் வழி, இறைவனுக்கு
உண்மையான வழிபாட்டை வழங்கக்கூடிய ஒரு நிரந்தர இடமாக அவர் மாறியுள்ளார். செபத்தால் வளப்படுத்தப்பட்ட
ஸ்தேவானின் இயேசுவுக்கான சாட்சியம் அவரின் மறைசாட்சிய மரணத்தில் தன் உச்சத்தை எட்டியது.
நம் தினசரி வாழ்வில் நம் செபத்தையும், இயேசு குறித்த ஆழ்ந்த தியானத்தையும், இறைவார்த்தை
மீதான தியானிப்புகளையும் ஒன்றிணைக்க புனித ஸ்தேவானின் பரிந்துரை மற்றும் எடுத்துக்காட்டு
வழி நாம் கற்றுக் கொள்வோமாக. இதன் வழி நாம் இறைவனின் மீட்புத் திட்டத்தை மேலும் சிறப்பான
விதத்தில் அறிந்து பாராட்டுவதோடு, நம் வாழ்வின் ஆண்டவராக இயேசுவை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு,
தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் உட்பட பல்வேறு
நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க
ஆசீரையும் அளித்தார்.