ஈராக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கு கிர்குக்பேராயர் முயற்சி
ஏப்ரல்28,2012. ஈராக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பல்சமயத்தவரை ஊக்குவிக்கும் முயற்சியை
முன்னின்று நடத்தியுள்ளார் அந்நாட்டு கிர்குக் நகர் கல்தேய ரீதி கத்தோலிக்கப் பேராயர்
லூயிஸ் சாக்கோ. சுன்னி இசுலாம் பிரிவினர், அராபியப் பழங்குடி இனத் தலைவர்கள், உள்ளூர்
அரசு அதிகாரிகள் என சுமார் 50 பிரதிநிதிகளுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்
பேராயர் சாக்கோ. இந்நடவடிக்கை குறித்துப் பேசிய பேராயர் சாக்கோ, இதில் கையெழுத்திட்டுள்ள
அனைவரும் கிர்குக்கில் அமைதியுடன் வாழ்வதற்கு உறுதி வழங்கினர் என்று கூறினார். கிறிஸ்தவர்கள்,
அனைத்து மக்கள் மத்தியிலும் நீதி மற்றும் ஒப்புரவை உருவாக்கும் பணியைக் கொண்டுள்ளார்கள்
என்றும் அவர் தெரிவித்தார். “வன்முறை நிலைமையை மாற்றாது அல்லது மேம்படுத்தாது; மாறாக,
அநீதி, சமூக இழப்புகள் மற்றும் வளர்ச்சியின்மையின் கடலுக்குள் நகரை அமுக்கி விடும்” என்று
கூறி, எல்லா வகையான வன்முறைகளை இவ்வொப்பந்தம் கண்டனம் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.கிர்குக்
நகர மக்களில் 4 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.