அருட்பணியாளர்கள் அரசியலில் பதவி வகிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது :
ஓசியானிய ஆயர்கள்
ஏப்ரல்,27,2012: அருட்பணியாளர்கள் அரசியல் கட்சிகளில் ஈடுபட வேண்டாமென்பதை நினைவுபடுத்தும்
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின்
ஆயர்கள். துரதிஷ்டவசமாக நமது சில சகோதர அருட்பணியாளர்கள், இவ்வாண்டில் Papua New
Guinea ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர்
என்று அப்பகுதி அருட்பணியாளர்களுக்கென கடிதம் எழுதியுள்ள ஆயர்கள், இம்முயற்சி, தங்களுக்கும்
பெரும்பாலான கத்தோலிக்கருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளனர். அருட்பணியாளர்கள்
அரசியலில் பதவி வகிக்க முயற்சிப்பது மக்களை மறுதலிப்பதாக இருக்கின்றது எனவும், மக்கள்
தூய வாழ்வில் வளர்வதற்குத் தாங்கள் உதவ வேண்டிய முக்கிய பணியை அருட்பணியாளர்கள் இழந்து
விட்டதாக இந்நடவடிக்கை காட்டுகின்றது எனவும் ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருஅவை
சட்ட எண் 285ன்படி அருட்பணியாளர்கள் அரசியலில் பதவி வகிப்பது தடை செய்யப்படுகின்றது என்பதையும்,
நன்னெறி வாழ்வு முறையில் எது சரி, எது தவறு என்பதை இயேசுவின் நற்செய்தியை அடிப்படையாக
வைத்து விளக்க வேண்டியது குருக்களின் பணி என்பதையும் ஆயர்களின் கடிதம் நினைவுபடுத்தியுள்ளது.