ஏப்.21,2012: இயற்கையின் வாழ்வாதார வளங்களையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாப்பதற்கு
பூமித்தாய் நாள் அழைப்பு விடுக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஏப்ரல்22, இஞ்ஞாயிறன்று அனைத்துலக பூமித்தாய் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி
வெளியிட்ட பான் கி மூன், இப்பூமியைப் பாதிக்கும் உலகளாவிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு
இந்நாள் அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் இவ்வுலகுக்கு
குறைந்தது 50 விழுக்காடு அதிக உணவும், 45 விழுக்காடு அதிக மின்சக்தியும், 30 விழுக்காடு
அதிகத் தண்ணீரும், இலட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புக்களும் தேவைப்படும் என்றும் அவர்
கூறியுள்ளார். எனவே உலகின் சவால்கள் அதிகம் எனவும், ஒரு பிரச்சனைக்கான தீர்வு எல்லாவற்றிலும்
முன்னேற்றத்தைக் கொணரும் எனவும் பான் கி மூன் கூறியுள்ளார். அனைத்துலக பூமித்தாய்
தினம் ஏப்ரல் 22ம் தேதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று 2009ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில்
தீர்மானிக்கப்பட்டது.