2012-04-19 15:17:25

24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு செல்கிறார் ஆங் சான் சூச்சி


ஏப்ரல்,19,2012. மியான்மர் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி, நார்வே நாட்டுக்கு வருகிற சூன் மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து மியான்மர் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்று தந்தவர் ஆங் சான். இவரின் மகள் ஆங் சான் சூச்சி.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த இவர், 1988ம் ஆண்டு தன்னுடைய தாயைப் பார்ப்பதற்காக தாயகம் திரும்பியவேளையில், நாட்டின் குடியரசு போராட்டத்தில் இறங்கினார். 90ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றபோதும், அவரை ஆட்சி அமைக்கவிடாமல், இராணுவ ஆட்சி ஆங் சான் சூச்சியை வீட்டுக்காவலில் வைத்தது.
1991ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், 1999ம் ஆண்டு இவர் கணவர் புற்றுநோயால், இலண்டனில் இறந்தபோதும் இவர் தாயகத்தை விட்டு செல்லவில்லை.
வெளிநாடு சென்றால் இராணுவ அரசு தன்னைத் தாயகம் திரும்ப அனுமதிக்காது என கருதிய சூச்சி, இராணுவ ஆட்சியாளர்களால் பல ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார். தற்போது, அவர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
குடியரசு நடைமுறைகள் மியான்மரில் தலையெடுத்துள்ளதால், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையைத் தளர்த்த உலக நாடுகள் முன்வந்துள்ளன. சமீபத்தில், மியான்மர் வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சூச்சியை இலண்டன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதை, அவரது தேசிய குடியரசு லீக் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் நார்வே செல்லும் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, ஜப்பானில் ஆறு நாடுகள் பங்கேற்கும், ஆசிய மாநாட்டில் மியான்மர் அதிபர் தீன் சீன், பங்கேற்கிறார். ஜப்பானில் இவ்வியாழன் முதல் 24ம் தேதி வரை தாய்லாந்து, கம்போடியா, லவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, மியான்மர் நாட்டை சேர்ந்த அதிபர், 28 ஆண்டுக்கு பிறகு ஜப்பானுக்கு செல்வது, இதுவே முதன் முறை.








All the contents on this site are copyrighted ©.