ஏப்ரல்,16,2012. தன் 85வது பிறந்த நாளையொட்டி, வத்திக்கான் மாளிகையில் திருப்பீட அதிகாரிகள்,
சில ஜெர்மன் ஆயர்கள் ஆகியோருடன் இணைந்து இத்திங்களன்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
16ம் பெனடிக்ட், இந்நாள் குறிப்பிடும் மூன்று முக்கிய நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தார். லூர்து
நகரில் அன்னைமரியை காட்சி கண்ட புனித Bernadette Soubirousன் விழா இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதைப்பற்றி
எடுத்துரைத்த பாப்பிறை, லூர்து நகரில் அனைமரியின் இருப்பை நினைவுறுத்தும் நீரூற்றையும்
சுட்டிக்காட்டி, நம்மைச் சுத்திகரிக்கும் மற்றும் நமக்கு வாழ்வை வழங்கும் உயிருள்ள நீர்
எங்கிருந்து வருகிறது என்பதன் அடையாளமாகத் தனக்கு புனித பெர்னதத்து விளங்குகிறார் என்று
கூறினார். 18ம் நூற்றாண்டில் இரந்து வாழ்ந்து, ஐரோப்பாவில் திருப்பயணியாக சுற்றிய
புனித Benedict Joseph Labreன் திருவிழாவும் இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய
பாப்பிறை, அவரின் எடுத்துக்காட்டான வாழ்வு ஓர் உண்மையான ஐரோப்பியப் புனிதரை நமக்குத்
தந்துள்ளது என்றார். பாஸ்கா மறையுண்மை காலத்தில் தான் பிறந்தது மற்றும் புனித சனியன்றே
திருமுழுக்குப் பெற்றது ஆகியவை பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, தான் இறைவனின் பிரசன்னத்தை
எப்போதும் உணர்ந்தே வருவதாகவும், அவரே தனக்கு எப்போதும் ஊக்க்கமளித்து வருவதாகவும் கூறி,
இறைவனுக்குத் தன் நன்றியையும் வெளியிட்டார்.