2012-04-14 15:26:33

கவிதைக் கனவுகள் - சந்தேகம்... கதவில்லாத கல்லறை


நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே ஆபத்தான ஓர் உணர்வு... சந்தேகம். சந்தேகம் தனித்த ஓர் உணர்வு அல்ல. அது பல உணர்வுகளின் பிறப்பிடம். சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம், கோபம், வருத்தம் என்று கூட்டுக் குடித்தனம் ஏற்படும். வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள கவிதை தொகுப்பிலிருந்து, Rammalar’s Weblog வழியாக சந்தேகம் பற்றி நம்மை வந்தடையும் கவிதை இது...
ஐயம்... விடைகளைத் தேடி நடப்பது
சந்தேகம்... விளக்குகளை அணைப்பது

ஐயம்... சாவியைத் தேடுவது
சந்தேகம்... கதவில்லாத கல்லறை எழுப்பி
நம்மை நாமே அடக்கம் செய்வது

பதில் சொல்லமுடியாத கேள்விகளில்
எப்போதும் சந்தேகத்திற்கே முதலிடம்

சந்தேகம்... ஓர் அதிசய மாத்திரை
அது... விழுங்கியவனை மட்டும்
நோயில் வீழ்த்துவதில்லை
பக்கத்தில் இருப்பவனுக்கும்
‘பக்க’ விளைவுகளை
ஏற்படுத்தி விடுகிறது.

சந்தேகத் திரைகளை நீ
போட்டுக் கொண்டிருக்கும் வரை
உன் வாழ்க்கை நாடகம்
ஒரு போதும்
துவங்கப் போவதில்லை.
க.து.மு.இக்பால்
நன்றி: வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள கவிதை தொகுப்பு
Rammalar’s Weblog








All the contents on this site are copyrighted ©.