2012-04-12 15:25:53

குஜராத் முதலமைச்சர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு கசப்பானது - இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ்


ஏப்ரல்,12,2012. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைக் கலவரங்களில் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வெளியாகியிருப்பது வேதனை தரும் ஒரு கசப்பான தீர்ப்பு என்று இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி துரித வண்டியை முஸ்லிம்கள் தீயிட்டுக் கொழுத்தினர் என்று கூறி எழுந்த ஒரு கலவரத்தில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கலவரத்தின்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முஸ்லிம்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், இந்தக் கலவரத்திற்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வழக்குகள் பதிவாகியிருந்தன.
இந்தியாவின் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை விசாரிக்க தனிப்பட்ட புலனாய்வுக் குழுவைக் குஜராத்திற்கு அனுப்பியது. இக்குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல குறைபாடுகள் இருந்ததென அகமதாபாத் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனராகப் பணிபுரியும் இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
புலனாய்வுக் குழுவின் செயல்பாடுகளும், அதைத் தொடர்ந்து வெளிவந்துள்ள தீர்ப்பும் வருத்தம் தருவதாய் இருந்தாலும், நீதியையும், உண்மையையும் நிலைநாட்டும் போராட்டம் தொடரும் என்று அருள்தந்தை பிரகாஷ் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.