ஏப்ரல் 11, 2012. புனித வாரக் கொண்டாட்டங்களைத் தலைமைதாங்கி நடத்திய திருத்தந்தை, அதன்
பின் சிறிது கால ஓய்வுக்கென காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருக்கும் பாப்பிறைகளின் கோடை விடுமுறை
இல்லத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதன் காலை உள்ளூர் நேரம்
10.20 மணியளவில் வத்திக்கான் வந்தடைந்து, தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த
திருப்பயணிகளை உள்ளூர் நேரம் 10.30 மணிக்குச் சந்தித்தார். அப்போது இந்திய நேரம் முற்பகல்
2 மணி. அவர் இவ்வார புதன் பொதுமறைபோதகத்தில் கிறிஸ்து உயிர்ப்பைத் தொடர்ந்த நிகழ்வுகள்
குறித்தே தன் கருத்துக்களை வழங்கினார். அன்பு சகோதர சகோதரிகளே, மரணம் மற்றும் இறப்பின்மீது
இயேசு கண்ட வெற்றியின் வழி பிறந்த உயிர்ப்பு தரும் ஆன்மீக மகிழ்வின் அடையாளத்தை நம் இன்றைய
பொதுமறைபோதகம் கொண்டுள்ளது. எருசலேம் மேல்மாடியில் குழுமியிருந்த சீடர்களுக்குத் தோன்றிய
இயேசு, தன் மீட்பின் காயங்களை அவர்களுக்குக் காண்பித்தபோது, அவர்களின் வாழ்வு மாற்றம்
கண்டது. உலகம் வழங்கமுடியா அமைதியைத் தூய ஆவியின் கொடையோடு தன் சீடர்களுக்கு வழங்கிய
இயேசு, அதே அமைதியை உலகெங்கும் எடுத்துச் செல்லும்படி அவர்களை அனுப்பினார். சீடர்களின்
இப்பணி புதிய உடன்படிக்கையின் மக்களாகிய திருஅவையின் பயணத்தைத் துவக்கி வைக்கிறது. உயிர்ப்பு
கொணரும் புதிய வாழ்வின் உண்மைகளுக்கு ஒவ்வொரு காலத்திலும் சாட்சிகளாக விளங்கும்படி, புதிய
உடன்படிக்கையின் மக்கள் அழைப்பு பெற்றுள்ளார்கள். இன்றும் நமதாண்டவராம் இயேசு, மகிழ்வு,
அமைதி, நம்பிக்கை மற்றும் வாழ்வின் கொடைகளுடன் நம் இதயங்களுக்குள் வருகிறார். எம்மாவுஸ்
பாதையில் இயேசுவைச் சந்தித்த சீடர்களைப்போல், நாமும் இயேசுவின் வார்த்தையிலும் அப்பம்
பிடுகையிலும் அவரைக் கண்டுகொள்வோமாக. இந்த உயிர்ப்பு விழாக்காலத்தில், உயிர்த்த கிறிஸ்துவோடு
இணைந்து நடைபோட தீர்மானிப்பதுடன், அவர் உயிர்ப்பின் வல்லமை மற்றும் அவரில் நாம் கொள்ளும்
விசுவாசம் நம்மை மாற்றியமைக்க அனுமதிப்போமாக. என தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை,
அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.