டப்ளின் நகரில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின்
பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet
ஏப்ரல்,11,2012. அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை
மாநாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet செல்வார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செவ்வாயன்று வெளியான இவ்வறிக்கையைக் கேள்வியுற்ற அயர்லாந்து
தலத் திருஅவையின் தலைவர் கர்தினால் Seán Brady, தன் மகிழ்வை வெளியிட்டவேளையில், அயர்லாந்தின்
மட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டுள்ள அக்கறை பல வழிகளில் வெளியாகிறது என்று
கூறினார். ஆயர்களுக்கானத் திருப்பீடத் திருப்பேராயத்தின் தலைவராக உள்ள கர்தினால்
Ouellet, ஜூன் மாதம் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும் திருநற்கருணை மாநாட்டில்
முழுமையாகக் கலந்து கொள்வார் என்றும், இம்மாநாட்டின் துவக்கத் திருப்பலியையும், நிறைவுத்
திருப்பலியையும் தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு
அகில உலக திருநற்கருணை மாநாடு கனடாவின் Quebec நகரில் நடைபெற்றபோது, கர்தினால் Ouellet,
Quebec உயர்மறைமாவட்டத்தின் பேராயராக இருந்து, மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தியவர்
என்பது குறிப்பிடத்தக்கது.