2012-04-10 14:50:04

கவிதைக் கனவுகள் - தூணும் துரும்பும் இறைவனா?


எங்கும் நிறைந்துள்ள இறைவனை
எங்கே, எவ்விதம் காண்பது?
எக்காலமும் மனிதருடன் வாழும்
ஏக்கம் நிறைந்த கேள்வி இது.

தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இறைவன்
ஊனிலும் உறவிலும் உறைபவன் இறைவன்
வேதங்கள் காட்டும் வெளிச்சம் இது.

தூணிலும் துரும்பிலும் இறைவனா? அல்லது,
தூணும் துரும்புமே இறைவனா?
உலகம் எழுப்பிடும் கேள்வி இது.

துரும்பில் இறைவனைக் காண்பதும்
துரும்பையே இறைவனாய்க் காண்பதும்
துருவங்களாய் முரண்படும் எண்ணங்கள்.

துரும்பையும், தூணையும் இறைவனாக்கி
துவங்கும் உலக ஆராதனை
உண்மைக் கடவுளைப் புறந்தள்ளும்.

காசையேக் கடவுள் என்றும்
ஆசையே இறைவன் என்றும்
புதிய வேதங்கள் பெருகிவிடும்.








All the contents on this site are copyrighted ©.