2012-04-08 12:24:10

பாஸ்கா மெழுகுத்திரி தன்னையே கரைப்பதால் மட்டுமே ஒளி தரமுடியும் - திருத்தந்தை


ஏப்ரல்,08,2012. மனித வாழ்வுக்கும், மனித உறவுகள், தொடர்புகள் அனைத்திற்கும் ஒளியே அடித்தளமாக அமைகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இந்தச் சனிக்கிழமை இரவு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழாவின் திருவிழிப்புத் திருச்சடங்கினைத் தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, ஒளியையும் இருளையும் மையப்பொருளாகக் கொண்டு வழங்கிய மறையுரையின் சுருக்கம்:
படைப்பின் துவக்கத்தில் ஒளியை உருவாக்கிய இறைவன், கிறிஸ்துவின் உயிர்ப்பு வழியாக மீண்டும் ஒரு புதுப்படைப்பை உருவாக்கி, ஒளியை உலகில் மீண்டும் நிறுவினார்.
படைப்பின் வரலாற்றில் ஒவ்வொன்றும் படைக்கப்பட்டதற்கு நாட்கள் குறிக்கப்பட்டதுபோல், உயிர்த்த கிறிஸ்து இறைவனின் புதிய படைப்பு, புதிய நாளாக விளங்குகிறார். இன்று புதிதாக திருமுழுக்குப் பெறுவோர், இந்த புதிய ஒளியில் இணையும் வேளையில், கிறிஸ்துவின் புதிய வாழ்விலும் இணைகின்றனர். எனவேதான் திருஅவையின் ஆரம்ப நாட்களில் திருமுழுக்கை photismos அதாவது, அறிவொளி பெறுதல் என்று அழைத்தனர்.
இன்றைய உலகில் கடவுளையும், நன்னெறி மதிப்பீடுகளையும் சூழ்ந்து வரும் இருள், உலகின் வாழ்வுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. நாம் உருவாக்கி வரும் தொழில் நுட்பங்களால் இந்த ஆபத்து ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது.
செயற்கை விளக்குகளால் நமது நகரங்களை பெருமளவு ஒளிமயமாக்குவதால், நம்மால் விண்ணில் ஒளிரும் விண்மீன்களையும் காண முடிவதில்லை. நம் வாழ்வைச் சூழ்ந்துள்ள செயற்கை ஒளியால் உண்மை அறிவொளியைக் காணமுடியாமல் இருப்பதற்கு இது ஓர் அடையாளம்.
பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கில் பயன்படுத்தப்படும் மெழுகுத்திரியைப் பற்றிய எண்ணங்களை தன் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.
திருஅவையின் ஓர் அடையாளமாய் பாஸ்கா மெழுகுத்திரி அமைகிறது. இந்த மெழுகு தன்னையே கரைப்பதால் மட்டுமே ஒளி தரமுடியும். இந்த மெழுகு உருவாக பல தேனீக்கள் இணைந்து உழைக்க வேண்டியிருந்தது என பாஸ்காப் புகழுரையில் கேட்டோம். விசுவாசிகளாகிய நாம் ஒருங்கிணைந்து உழைப்பதன் வழியாகவும், நம்மையே தியாகம் செய்வதன் வழியாகவும் இந்த உலகை நாம் ஒளிமயமாக்க முடியும்.
இறையொளியின் மகிழ்வை நாம் ஒவ்வொருவரும் உணரவும், இந்த ஒளியைப் பிறருக்கு எடுத்துச் செல்லும் கருவிகளாய் மாறவும் இறைவனின் அருள்வளங்களை மன்றாடுவோம்... என்று தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.