2012-04-06 14:12:36

புனித வியாழன் மாலையில் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை, வழங்கிய மறையுரை


ஏப்ரல்,06,2012. இயேசு திருநற்கருணையை நிறுவினார் என்ற நிகழ்வு புனித வியாழன் இரவின் மையமாக, மகுடமாக உள்ள மறைபொருள் என்றாலும், இந்த இரவை இருளின், போராட்டத்தின் இரவாகவும் நாம் சிந்திக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் புனித வியாழனன்று மாலையில் உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இறைவனின் இரவு உணவு திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்துவது வழக்கம். இப்புனித வியாழனன்று திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இருள், இரவு ஆகியவை உறவுகள் அற்ற, தொடர்புகள் அற்ற ஒரு நிலையை வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்றும், ஒளியில் வாழமுடியாத தீய சக்திகள் இருளில் மட்டுமே வாழமுடியும் என்றும் கூறிய திருத்தந்தை, ஒளியான இறைமகன் கிறிஸ்து இருளை வெல்வதற்காக அந்த இரவுக்குள் நுழைந்தார் என்பதை எடுத்துக் கூறினார்.
கிறிஸ்து கெத்சமனி தோட்டத்தில் மேற்கொண்ட போராட்டங்களையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, அந்தப் போராட்டங்களில் தன் நண்பர்களின் துணை அவருக்குக் கிடைக்காமல் போயிற்று என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மனித உறவுகள் அனைத்தும் தனக்குக் கிடைக்காத நிலையில் இறைமகன் இயேசு விண்ணகத் தந்தையின் துணையை நாடினார் என்பதைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, தன் போராட்டத்தின்போது இயேசு பயன்படுத்திய Abba என்ற வார்த்தையின் ஆழத்தை விளக்கினார். இயேசு பயன்படுத்திய இந்த வார்த்தை 'தந்தை' என்ற பொதுப்படையான வார்த்தை அல்ல, மாறாக, ஒரு சிறு குழந்தை உரிமையோடு, பாசத்தோடு அழைக்கும் 'அப்பா' என்ற சொல் என்றும், இந்தச் சொல்லைப் பயன்படுத்த இஸ்ரயேல் மக்கள் பயந்தனர் என்பதையும் தன் மறையுரையில் விளக்கிக் கூறினார் திருத்தந்தை.
″அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்″ (மாற்கு 14: 36) என்ற இறைவார்த்தையை எடுத்துக்காட்டிப் பேசிய திருத்தந்தை, ஒரு மனிதன் என்ற முறையில் இயேசு தன் துன்பத்தைக் கண்டு பயந்தாலும், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாய் இருந்தார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இறைவனின் விருப்பத்திற்கு எதிராக, இறைவனுக்கே எதிராக மனிதர்கள் தங்களை முன்னிறுத்தும்போது, உண்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர் என்றும், மனித வரலாற்றில் இந்த எதிர்ப்பு அடிக்கடி நிகழ்ந்துள்ளதால், கடவுள், உண்மை, வாழ்வு ஆகிய உயரிய விழுமியங்களுக்கு எதிராக மனித குலத்தின் போராட்டம் தொடர்கிறது என்றும் தன் மறையுரையின் இறுதியில் திருத்தந்தை எச்சரிக்கை விடுத்தார்.
சுய விருப்பம், இறைவனின் விருப்பம் என்ற போராட்டத்தில் இயேசு காட்டிய பணிவும், கீழ்ப்படிதலுமே உண்மையான் விடுதலைக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் என்றும், அந்த பணிவை நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு இறைவரம் வேண்டுவோம் என்றும் கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்திருப்பலியின்போது உரோம் மறைமாவாட்டத்தைச் சேர்ந்த பன்னிரு குருக்களின் பாதங்களைத் திருத்தந்தை கழுவினார். இத்திருப்பலியின்போது திரட்டப்பட்ட காணிக்கைத் தொகை அனைத்தும் சிரியாவில் துன்புறும் மக்களுக்கு அனுப்பப்படும் என்று வத்திக்கான் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.