மனித வியாபாரத்தைத் தடை செய்வதற்கான கூட்டு முயற்சிகள் அதிகரிக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்
ஏப்.04,2012. உலகில் இடம் பெறும் மனித வியாபாரத்தைத் தடை செய்து அதற்குப் பலியாகுவோருக்குப்
பாதுகாப்பு அளிப்பதற்கு நாடுகள் எடுத்து வரும் கூட்டு முயற்சிகளை அதிகரிக்குமாறு ஐ.நா.
உயர் அதிகாரிகள், ஐ.நா.உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளனர். “மனித வியாபாரத்திற்கு
எதிராய்ப் போராடுதல்:பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துவதற்கு கூட்டு முயற்சி” என்ற
தலைப்பில் இச்செவ்வாயன்று நியுயார்க்கில் ஐ.நா.பொது அவையில் நடந்த கலந்துரையாடலில் பேசிய
ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், மனித வியாபாரத்தை நடத்துவோர் ஆயுதங்களையும் அச்சுறுத்தல்களையும்
பயன்படுத்தும் போது நாம் சட்டங்கள் மற்றும் புலன்விசாரணைகள் மூலம் அவர்களுக்குப் பதில்
சொல்ல வேண்டும் என்று கூறினார். ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகத்தின்
(UNODC) கணிப்புப்படி, உலகில் சுமார் 24 இலட்சம் பேர் மனித வியாபாரத்திற்குப் பலியாகியுள்ளனர்,
இவர்களில் 80 விழுக்காட்டினர் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர், இவ்வியாபாரத்தால்
ஆண்டுக்கு 3,200 கோடி டாலர் வருவாய் கிடைக்கிறது என்று தெரிய வருகிறது. மனித வியாபாரத்திற்குப்
பலியாகுவதற்குக் காரணமாகும் கடும் வறுமையை ஒழிப்பதற்கு நாடுகள் நடவடிக்கை எடுக்குமாறும்
பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.