ஏப்ரல் 04, 2012. மெக்சிகோ மற்றும் கியூப குடியருசுக்கான ஆறு நாள் திருப்பயணத்தை நிறைவுச்
செய்து கடந்த வியாழனன்று காலை வத்திக்கான் நாடு திரும்பிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,
இப்புதனன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் நடத்திய பொது மறைபோதக சந்திப்பின்போது,
அத்திருப்பயணம் குறித்த கருத்துக்களை அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளுடன் பகிர்ந்து
கொண்டார். மெக்சிகோ மற்றும் கியூப குடியரசுக்கான என் அண்மைத் திருப்பயணம், அந்நாடுகளின்
மக்களையும், இலத்தீன் அமெரிக்காவின் அனைத்து மக்களையும் விசுவாசத்திலும், நீதியான இணக்க
வாழ்வுடன் கூடிய சமூக ஒழுங்கமைவைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் நம்பிக்கையிலும் உறுதிப்படுத்துவதற்கானதாக
இருந்தது. பக்தியிலும் ஆன்மீக மகிழ்விலும் நிறைந்து காணப்பட்ட லியோன் திருவழிபாட்டுக்
கொண்டாட்டங்களில், மெக்சிகோ மக்கள் தங்களின் சிறப்பான வருங்காலத்திற்காக உழைப்பதிலும்,
வன்முறைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளிலும் தங்களின் ஆழமான கிறிஸ்தவ அடிப்படை வேர்களிலிருந்து
தூண்டுதலைப் பெறவேண்டும் என அவர்களுக்கு ஊக்கமளித்தேன். கியூப திருப்பயணத்தின்போது,
நற்செய்திக்கான பொது சாட்சியத்திலும், புதுப்பிக்கப்பட்ட, ஒப்புரவான, சுதந்திர சமூகத்திற்குமான
மக்களின் ஏக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதிலும் தலத்திரு அவையை உறுதிப்படுத்த ஆவல் கொண்டேன்.
Santiago de Cubaவிலிருந்து El Cobreவின் பிறரன்பு அன்னைமரி திருத்தலத்திற்குத் திருப்பயணியாக
நான் சென்றேன். பின் அங்கிருந்து Havana சென்று, விசுவாசம் மீண்டும் உயிர் பெறுவதற்கும்,
இறை அன்பிற்கு நம்மைத் திறந்தவர்களாக செயல்படுவதற்கும், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட
சுதந்திரம் மற்றும் மனித மாண்பு பற்றிய உண்மையை மதிப்பதற்கும் செபித்தேன். என தன்
பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, புனித வாரத்தின் இறுதி மூன்று நாட்களில் நாம்
எத்தகைய தயாரிப்பையும் நிலைப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
இந்த புனித மூன்று நாட்களில், இயேசு சாவிலிருந்து வாழ்வுக்கு கடந்துச் சென்ற மீட்பு நிகழ்வுகளைக்
கொண்டாட தயாரித்து வரும் நாம், சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட, ஒப்புரவு தரும் இயேசுவின்
அன்பிற்கு நம் இதயங்களைத் திறப்போம். அந்த அன்பு நம் வாழ்வை மாற்றவும், உயிர்ப்பு மறையுண்மையை
மகிழ்வுடன் சிறப்பிக்கவும் நமக்கு உதவுவதாக, என்று கூறினார். தன் மறைபோதகத்தின்போது
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட 'உலக நிலக்கண்ணி வெடி
விழிப்புணர்வு நாள்' குறித்தும் நினைவு கூர்ந்தார். நிலக்கண்ணி வெடி பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும்
குடும்பங்களோடு தன் அருகாமையையும் தெரிவித்தார் அவர். 'மரணம் மற்றும் அழிவின் ஆபத்துகளைக்
குறித்து அச்சமுறாமல் வாழ்வின் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து நடைபோட உதவுமாறு' முன்னாள்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் விடுத்திருந்த அழைப்பையும் எடுத்துரைத்து, இத்தகைய அழிவுதரும்
கொடுமையான ஆயுதங்களிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ப்பணித்து உழைக்கும் அனைவருக்கும்
ஊக்கமளிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.