2012-03-31 15:24:17

கவிதைக் கனவுகள் - இளமையும் முதுமையும் இரட்டைப்பிறவிகள்


ஒவ்வோர் ஆண்டும் குருத்து ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. இளமையும், முதுமையும் உடலின் கூறுகளா, உள்ளத்தின் கூறுகளா என்ற கேள்வி என்னில் எழுந்தபோது, விடையாய் வந்த கவிதை இது.

இளமையும் முதுமையும்
வருடங்களின் கூட்டல் கணக்கல்ல...
வருத்தங்களின் வழக்கு

எண்ணங்களின் எழுச்சி
கற்பனைகளின் கடிவாளம்
உணர்வுகளின் உளி... இளமை
எண்ணங்களின் தளர்ச்சி
கற்பனைகளின் கல்லறை
உணர்வுகளின் உறைபனி... முதுமை.

வயதால் தோள்கள் தளர்வதில்லை
கவலைகளைச் சுமப்பதால்...
வயதால் கண்கள் மங்குவதில்லை
கனவுகள் காண மறுப்பதால்...
வயதால் கால்கள் தடுமாறுவதில்லை
பயங்களோடு பயணம் செய்வதால்...

உன் நம்பிக்கையின் விளைவு இளமை
உன் சந்தேகத்தின் விளைவு முதுமை
உன் வீரத்தின் விளைவு இளமை
உன் பாரத்தின் விளைவு முதுமை
உன் தியாகத்தின் விளைவு இளமை
உன் சோகத்தின் விளைவு முதுமை

வருடங்கள் பல வாழ்வதால் வயது கூடிவிடாது
வருத்தங்கள் பல வாழ்வானால் வயது கூடிவிடும்.








All the contents on this site are copyrighted ©.