2012-03-30 14:40:22

மரணதண்டனை ஐப்பானை அழிக்கக்கூடும் – நாகசாகி பேராயர்


மார்ச்30,2012. ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வியாழனன்று மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, அந்நாடு மரணதண்டனை சட்டத்தை இரத்து செய்யுமாறு, ஜப்பான் ஆயர்கள் அரசைக் கேட்டுள்ளனர்.
பல கொலைகளைச் செய்த மூன்று குற்றவாளிகள் இவ்வியாழனன்று தூக்கிலிடப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami, கொலை செய்தவர், கொலையாளியாக இருந்த போதிலும்கூட, அந்தக் கொலையாளியைக் கொலை செய்வது மற்றொரு கொலையாக இருக்கின்றது என்று கூறினார்.
80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் மரணதண்டனையை ஆதரிக்கிறார்கள் என்று அரசு அதிகாரிகள் சொல்கின்றபோதிலும், இது, சமுதாயத்தின் குருட்டுத்தன்மையைக் காட்டுகின்றது என்றும், இந்தப் போக்கு ஆன்மாவைக் கடினப்படுத்தும் எனவும் பேராயர் Takami எச்சரித்துள்ளார்.
ஜப்பானில், 2010ம் ஆண்டு ஜூலையில் இரண்டு பேருக்கு தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அதற்குப் பின்னர், இவ்வியாழனன்று மூன்று பேர் தனிப்பட்ட அறைகளில் தூக்கிலிடப்பட்டனர். அந்நாட்டில், இன்னும் 132 தூக்குத்தண்டனை கைதிகள் உள்ளனர் என்று Kyodo செய்தி நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.