2012-03-30 14:36:56

மதியிறுக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவளிக்க பேராயர் Zimowski வேண்டுகோள்


மார்ச்30,2012. மூளையின் சாதாரண வளர்ச்சியின்மையால் ஏற்படும் Autism நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தோழமையுணர்வு கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கேட்டுள்ளார்.
ஏப்ரல் 2ம் தேதி வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக Autism என்ற மதியிறுக்கம் நோய் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட பேராயர் Zimowski, இந்நோயின் பாதிப்பால் துன்புறுவோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலைகளை நோக்கினால் இந்நோயின் கொடுந்தன்மை குறித்து அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்காலத்தில் தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் Autism நோய் பரவி வருவதால், பன்னாட்டு அளவில் இதனைத் தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறும், இம்முயற்சிக்குத் திருஅவைத் தனது ஆதரவை வழங்குவதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில், ஒவ்வொரு பத்தாயிரம் சிறாருக்கு சுமார் 60 சிறார் வீதம் இந்நோயால் தாக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் பேராயரின் செய்தி கூறுகிறது.
ஒருவரின் மூளை வளர்ச்சி பாதிப்பால், அவரின் மக்கள் தொடர்புத் திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள், அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தை போன்றவை இயல்பிற்கு மாறாக அமைகின்றன. இத்தகைய பாதிப்பு, Autism அதாவது மதியிறுக்கம் நோய் என்று அழைக்கப்படுகின்றது. இந்நோய், பொதுவாக குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் பாதிக்கும். இது ஒரு நோயல்ல, மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.