நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையை ஊக்குவித்து
வருகிறார் கர்தினால் Tauran
மார்ச்30,2012. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒருவர் ஒருவர் மீது புரிந்து
கொள்ளுதலை உருவாக்கவும், அந்நாட்டைப் பாதித்துள்ள வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும்,
ஒருவர் ஒருவருடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால்
Jean-Louis Tauran. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
இடையே அடிக்கடி சண்டைகள் இடம் பெற்று வருவதை முன்னிட்டு, அந்நாட்டுக்குப் பத்து நாள்கள்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran,
இவ்விரு மதத்தவருக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும்
முஸ்லீம்களும் அமைதியுடன்கூடிய நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின்
செய்தியையும் அந்நாட்டினருக்கு வழங்கியுள்ளார் கர்தினால் Tauran. பல்வேறு மதங்களைச்
சார்ந்த மக்கள், அமைதியுடன்கூடிய நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்குச் சகிப்புத்தன்மை
என்ற பாதையில் சென்றால் மட்டுமே முடியும் என்று ஜோஸ் நகரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில்
குறிப்பிட்டார் கர்தினால். மனித உறவுகள் அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் அடிப்படையாகக்
கொண்டிருக்குமாறும் அவர் வலியுறுத்தினார். நைஜீரியாவின் Sokoto நகரில், இசுலாம் தீவிரவாதக்
குழுவால் சுமார் 10 மாதங்களாகப் பிணையலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரித்தானியரும் ஓர்
இத்தாலியரும் இம்மாதம் 8ம் தேதி கொல்லப்பட்டனர்.