பகைமைப் பிரச்சாரங்களை நிறுத்த இலங்கை அரசுக்கு, மத மற்றும் மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்
மார்ச்,27,2012. மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
விதமாக இலங்கையில் பரப்பப்படும் பகைமைப் பிரச்சாரங்களிலிருந்து அந்நாட்டு அரசு தன்னை
விலக்கிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன மத மற்றும் சமூகக் குழுக்கள். கிறிஸ்தவ
மதத்தலைவர்கள், மனிதஉரிமை நடவடிக்கையாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும்
பல சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இணைந்து அரசுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில், பகைமையை
ஊட்டும் பிரச்சாரங்களிலிருந்து அரசு ஒதுங்கியிருப்பதோடு, மனித உரிமைகளுக்காக போராடுபவர்களைப்
பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என கேட்டுள்ளனர். இதற்கிடையே, இலங்கை அரசின் மனித உரிமை
மீறல்கள் குறித்த ஐநா தீர்மானத்தை ஆதரித்த இலங்கை பத்திரிகையாளர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள்
வந்துள்ள நிலையில், வெளிநாட்டில் அரசுக்கு எதிராகப் பேசும் பத்திரிகையாளர்களின் கால்களை
முறிப்பேன் என இலங்கை மக்கள்தொடர்பு அமைச்சர் மெர்வின் சில்வா கூறியுள்ளது மேலும் பதட்டங்களுக்கு
வழிவகுத்துள்ளது.