வேதனை நரகத்தில் தங்கி உழைத்து வரும் அருள்பணியாளர்களை விண்ணகத் தூதர்களாகப் பார்க்கத்
தோன்றுகிறது - சிரியாவுக்கான திருப்பீடத் தூதர்
மார்ச்,23,2012. சிரியாவில் நிலவும் மோதல்களைப் பற்றி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை உண்மை
நிலையைத் தெளிவாகத் தருகிறது என்றும், இந்த அறிக்கையின் அடிப்படையில் சிரியாவில் வன்முறையை
நீக்கும் வழிகளை அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வத்திக்கான்
அதிகாரி ஒருவர் கூறினார். தமாஸ்கு நகரில் உள்ள புனித சிரில் ஆலயத்தில் இப்புதனன்று
நடைபெற்ற ஒரு பல்சமய செப வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்களிடம்
பேசிய சிரியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari, இவ்வாறு கூறினார். ஐ.நா.பாதுகாப்புக்
குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாய் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ள ஆறு அம்சங்கள் சிரியாவில் அமைதியைக் கொணரும் வழிகளைக் கூறுகின்றன என்று
பேராயர் Zenari, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிடல்,
வன்முறைகளை நிறுத்துதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், காரணமின்றி கைது செய்யப்பட்டோரை
விடுவித்தல், செய்தியாளர்கள் தடையின்றி நாட்டில் நடமாட அனுமதித்தல், அரசியல் ரீதியான
உரையாடல்களை மேற்கொள்ளுதல் என்ற இந்த ஆறு பரிந்துரைகளை சிரியா செயல்படுத்த அனைத்து நாடுகளும்
உதவி செய்ய வேண்டும் என்று பேராயர் Zenari வலியுறுத்திக் கூறினார். வன்முறைகளுக்குப்
பயந்து நாட்டை விட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கூடி வந்தாலும், இந்த வேதனை
நரகத்தில் தங்கி உழைத்து வரும் அருள்பணியாளர்களை விண்ணகத் தூதர்களாகப் பார்க்கத் தோன்றுகிறது
என்று பேராயர் தன் உரையில் சிறப்பாக நினைவு கூர்ந்தார்.