2012-03-23 15:11:22

திருப்பீடக் கலாச்சாரக் கழகம் ஆப்ரிக்க நாட்டுத் தூதர்களுடன் சந்திப்பு


மார்ச்,23,2012. திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாட்டுத் தூதர்களுடன் வருகிற திங்களன்று ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது திருப்பீடக் கலாச்சாரக் கழகம்.
பன்னாட்டுத் தூதர்களுடன் திருப்பீடக் கலாச்சாரக் கழகம் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி இது. சென்ற ஆண்டு இதே போன்றதொரு சந்திப்பு ஆசிய நாட்டுத் தூதர்களுடன் நடைபெற்றது.
திருப்பீடக் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasiம், செயலர் ஆயர் Barthelemy Adoukonouம் இச்சந்திப்பில் உரையாற்றுவர் என்றும், புனித பிரான்சிஸ் சேவியர் துறவுச் சபையைச் சேர்ந்த அருள்தந்தை Theodore Mascarenhas இச்சந்திப்பின் கூட்டங்களை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடக் கலாச்சாரக் கழகத்திற்கும், பன்னாட்டுத் தூதரகங்களுக்கும் இடையே நல்லதொரு உறவு வளர்ந்துள்ளது என்றும், கலாச்சாரத்தின் அடிப்படையில் பல கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும் இக்கழகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள இச்சந்திப்பில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 23 நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.