திருத்தந்தையின் திருப்பயணம் மெக்சிகோ நாட்டில் உள்ள இளையோருக்கு நம்பிக்கையையும்,
உற்சாகத்தையும் தரும் - திருப்பீடச் செயலர்
மார்ச்,22,2012. மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் அந்நாட்டில்
உள்ள இளையோருக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் நற்செய்தியாக அமையும் என்று
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார். இவ்வெள்ளியன்று மெக்சிகோ
மற்றும் க்யூபா நாடுகளில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து மெக்சிகோ தொலைக்காட்சி
நிறுவனங்களுக்கு கர்தினால் பெர்தோனே அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். சமுதாயத்தில்
முன்னேறுவதற்கு ஆபத்து நிறைந்த குறுக்கு வழிகளைப் பின்பற்ற மெக்சிகோவில் வாழும் இளையோர்
கவர்ந்திழுக்கப்படாமல், நேர்மையான வழிகளை அவர்கள் தேடும்படி திருத்தந்தை தன் திருப்பயணத்தின்போது
அவர்களுக்கு சிறப்பான செய்திகளை வழங்க உள்ளார் என்று கர்தினால் பெர்தோனே தெரிவித்தார். போதைப்பொருள்
வர்த்தகம், மற்றும் வன்முறை குழுக்களின் ஆதிக்கம் ஆகியவை மெக்சிகோ நாட்டில் பெற்றுள்ள
இடத்தைப் பற்றி திருத்தந்தை நன்கு அறிந்துள்ளார் என்று கூறிய திருப்பீடச் செயலர், சமுதாயப்
பிரச்சனைகள் மத்தியிலும், மெக்சிகோ மக்களிடம் வேரூன்றியிருக்கும் விசுவாசத்தையும் திருத்தந்தை
நன்கு அறிந்துள்ளார் என்று கூறினார். ஒப்புரவுடன் வாழ்வது, நேரிய வழிகளில் வாழ்வது
போன்ற கிறிஸ்தவ விழுமியங்களில் மெக்சிகோ மக்கள் உறுதி பெறுவதற்கு திருத்தந்தையின் திருப்பயணம்
தூண்டுதலாக அமையும் என்று கர்தினால் பெர்தோனே வலியுறுத்திக் கூறினார்.