இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நீதி விசாரணைக்குக் கொண்டுவரப்பட
வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் அவை
மார்ச்22,2012. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட
அரசுத் துருப்புகள் நீதி விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று ஐ.நா.மனித உரிமைகள்
அவை இவ்வியாழனன்று வலியுறுத்தியது. இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக்
கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும்
அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு
இலங்கை அரசின் 70 பேர் அடங்கிய வலுவான குழு கடும் முயற்சிகள் செய்ததையும் விடுத்து, அமெரிக்கா
முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் அவையில் இந்தத்
தீர்மானம் தொடர்பில் இவ்வியாழனன்று நடந்த வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவாக
வாக்களித்ததையடுத்து இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள்
அவையில், சீனா, இரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன மற்றும்
8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. போர்க்காலத்தில் இரு தரப்பினரும் புரிந்த
குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுவதன் மூலமே போருக்குப் பின்னான இலங்கையில்
நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும் என்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்
சேர்ந்து இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.