பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்குமாறு அருளாளர் அன்னை
தெரேசா சபையின் அருட்சகோதரிகள் விண்ணப்பம்
மார்ச்,21,2012. இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் மாவோயிஸ்ட் குழுவினரால் பிணைக்கைதிகளாக
வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்குமாறு அருளாளர் அன்னை தெரேசா சபையின்
அருட்சகோதரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவ்விரு இத்தாலியர்களின் குடும்பத்தினரும்,
நண்பர்களும் சொல்லொண்ணா வேதனைகள் அடைந்துள்ளனர், எனவே, ஒடிஸாவின் ஏழைகள் மத்தியில் உழைத்து
வரும் சகோதரிகளாகிய நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம், இவர்களை எந்த நிபந்தனையும்
இன்றி விடுவியுங்கள் என்று பிறரன்புச் சகோதரிகளின் ஒடிஸா மாநிலத் தலைவியான அருள்சகோதரி
Suma கூறியுள்ளார். மாவோயிஸ்ட் குழுவினர் இவ்விரு இத்தாலியர்களையும் விடுவிப்பதற்கு
இணையாக 13 கோரிக்கைகளை ஒடிஸா அரசுக்கு விதித்துள்ளது என்றும், இவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது
கடினம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் குழுவினருடன் பேசுவதற்கு
மூவர் குழுவொன்றை அனுப்ப ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளதாக ஆசிய செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.