பாக்தாத் நகரில் புனித மத்தேயு கோவில் உட்பட 20 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்
மார்ச்,21,2012. ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள புனித மத்தேயு பெயர் கொண்ட சிரிய
ஆர்த்தடாக்ஸ் கோவில் உட்பட 20 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் இச்செவ்வாயன்று இடம் பெற்றன. ஈராக்
நாட்டில் சதாம் ஹுசெயின் ஆட்சியைக் கவிழ்க்கவும், அவரைக் கைது செய்யவும் அமெரிக்கப் படைகள்
2003ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி அந்நாட்டில் நுழைந்தன. அமெரிக்கப் படைகள் நுழைந்த நாளின்
ஒன்பதாம் ஆண்டு நிறைவை நினைவுப்படுத்தும் வண்ணம் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்று
ஊடகங்கள் கணிக்கின்றன. புனித மத்தேயு கோவிலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர்
இறந்தனர், மற்றும் ஐந்து பேர் காயமுற்றனர் என்றும், ஏனைய இருபதுக்கும் அதிகமான குண்டு
வெடிப்புக்களில் 39 பேர் இறந்துள்ளனர் மற்றும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்
என்றும் கூறப்படுகிறது. 2003ம் ஆண்டிலிருந்து அந்நாட்டை விட்டு 2011ம் ஆண்டு அமெரிக்கப்
படைகள் விலகிச் செல்லும் வரை, ஈராக்கில் 4550 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர் என்றும்,
100000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் என்றும் தெரிகிறது.