கந்தமால் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் குழு ஐ.நா. அதிகாரியுடன்
சந்திப்பு
மார்ச்,21,2012. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உலகின் உயர்ந்ததொரு
அமைப்பிடம் முறையிட புதுடில்லி வந்துள்ளோம் என்று கந்தமால் வன்முறையில் பாதிக்கப்பட்ட
ஒருவர் கூறினார். 2008ம் ஆண்டு ஒடிஸா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு
எதிராக நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக எழுவர் அடங்கிய குழு
ஒன்று இச்செவ்வாயன்று ஐ.நா.வின் அதிகாரியைச் சந்திக்க புதுடில்லி சென்றது. ஐ.நா.வின்
நீதி விவாகரங்களை கண்காணிக்கும் Christof Heyns அவர்களைச் சந்தித்த இப்பிரதிநிதிகள்,
இந்து அடிப்படைவாதக் குழுவினரால் தங்களுக்கு நேர்ந்த வன்முறைகளையும், காவல் துறையினர்
அந்த நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதையும் வலியுறுத்திக் கூறினர். கடந்த சனிக்கிழமை
புதுடில்லி வந்து சேர்ந்த ஐ.நா.அதிகாரி Christof Heyns, இப்பிரதிநிதிகளின் முறையீடுகளைக்
கவனமாகக் கேட்டார் என்றும், தன் கருத்துக்களை அவர் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள்
அமைப்பிடம் சமர்ப்பிப்பார் என்றும் இக்குழுவிற்குத் தலைமையேற்ற தலித் மனித உரிமைகள் அமைப்பின்
தலைவர் S.D.J.M பிரசாத் கூறினார்.