மும்பை அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயற்கைக்குப் புறம்பாக நடைபெறும் நிகழ்வைக் குறித்து
கருத்துக்கள்
மார்ச்,14,2012. இயற்கைக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நிகழ்வையும் புதுமை என்று
கூறுவதில் கத்தோலிக்கத் திருஅவை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்துள்ளது என்று
இந்தியாவின் ஆயர் ஒருவர் கூறினார். கடந்த ஒரு வாரமாக மும்பையின் Irla என்ற பகுதியில்
உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் உள்ள ஒரு சிலுவையிலிருந்து தண்ணீர் வடிந்து வருவதாகக்
கூறப்படும் ஒரு நிகழ்வைக் காண மக்கள் திரண்டு வருகின்றனர். இந்தியப் பகுத்தறிவு கழகத்தின்
தலைவரான Sanal Edamaruku என்பவர் இந்த நிகழ்வைக் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளதோடு,
இந்தச் செயல்பாடு மக்களிடம் இருந்து பணம் திரட்டும் ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளார். Edamarukuவின்
கூற்றைக் குறித்துத் தன் கருத்தை வெளியிட்ட மும்பை துணை ஆயர் Agnelo Gracias, Irlaவில்
நடைபெறுவது ஒரு புதுமையா என்று கேள்வி எழுப்புவது சரியே, ஆனால், இது தொடர்பாக, பணம் திரட்டும்
முயற்சியில் திருஅவை ஈடுபட்டுள்ளது என்று விமர்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று
தெரிவித்தார். பகுத்தறிவு கழகத்தின் தலைவர் திருஅவை மீது தொலைக்காட்சியில் கூறியவை
அர்த்தமற்ற பொய் வாதங்கள் என்றும், பணம் திரட்டுவது கத்தோலிக்கத் திருஅவையின் நோக்கமாக
என்றும் இருந்ததில்லை, மாறாக, இந்தியா முழுவதும் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டு வரும்
பிறரன்புப் பணிகளைப் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும் என்று வேளாங்கண்ணி ஆலயத்தில் பணி
புரியும் அருள்தந்தை Augustine Palett கூறினார்.