மார்ச் 14, 2012. குளிர்காலம் முடிந்து இதமான வசந்த காலத்தை அனுபவித்து வரும் உரோம்
நகரில், திருத்தந்தையின் புதன் மறைபோதகங்கள் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறுவது கடந்த
வாரத்திலிருந்து துவங்கி விட்டன. இயேசுவின் செபம் குறித்த தன் மறைக்கல்வி சிந்தனைகளை
ஒரு தொடராக சில வாரங்கள் வழங்கி, அதனைக் கடந்த புதனன்று நிறைவுச் செய்தத் திருத்தந்தை,
இப்புதனன்று, விவிலியத்தின் 'திருத்தூதர் பணிகள்' நூல் மற்றும் புனித பவுலின் திருமுகங்களில்
காணப்படும் செபம் பற்றிய சிந்தனைகள் குறித்த ஒரு தொடரைத் துவக்கினார்.
கிறிஸ்தவ
செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று, திருத்தூதர் பணி நூல்
மற்றும் புனித பவுலின் திருமுகங்களில் செபம் குறித்துக் காணப்படுபவைகள் பற்றிய புதியத்
தொடர் ஒன்றைத் துவக்குவோம் எனத் தன் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். இன்று நான் அன்னைமரி குறித்து உங்களோடுப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திருத்தூதர்களுடன் எருசலேம் மாடியறையில் தூய ஆவியின் கொடைக்காகக் செபத்தோடு காத்திருந்த
அன்னை மரியை நோக்குவோம். கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு முதல் இயேசுவின் சிலுவை மற்றும்
அதற்குப் பின்னான பெந்தகோஸ்தே வரையிலும், அன்னைமரியின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும்,
கிறிஸ்துவில் இறைவனின் மீட்புத்திட்ட மறையுண்மையை ஆழ்ந்து தியானித்து செபிக்கும் தாயாகவே
அன்னை மரியை நமக்கு முன்வைக்கிறார் புனித லூக்கா. எருசலேம் மாடியறையில் நாம் அன்னை மரியின்
முக்கிய இடத்தைக் காண்கிறோம். அவரே விசுவாசம் மற்றும் பிறரன்பில் நம் வழிகாட்டியாகவும்
முதன்மை எடுத்துக்காட்டாகவும் உள்ளார். இறைவனின் தாயாகவும் திருஅவையின் அன்னையாகவும்
இருக்கும் அன்னைமரி, மீட்பு வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய வேளையிலும் திரு அவைக்குள்ளும்
திரு அவையோடு இணைந்தும் செபிக்கிறார். நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அன்னைமரியின்
கைகளில் ஒப்படைத்து, செபத்தின் தேவை குறித்து நமக்குக் கற்றுத்தர அவரை அனுமதிப்போமாக.
இதன்வழி, நாம் அவரின் மகனுடன் அன்பின் ஒன்றிப்பில், தூய ஆவியின் அருட்பொழிவுக்கும், உலகின்
அனைத்து இறுதி எல்லை வரையிலான நற்செய்தி பரப்புக்கும் வேண்டுவோமாக.
இவ்வாறு, தன்
புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும்
அளித்தார்.