கிறிஸ்தவர்கள் புதைக்கப்படும் கல்லறைகள் மதிப்பிற்குரியன - கோவா தலத் திருஅவை
மார்ச்,14,2012. இறைவனை வழிபடும் ஆலயங்களுக்கு அடுத்தபடியாக, கத்தோலிக்க விசுவாசிகள்
புதைக்கப்படும் கல்லறைகள் மதிப்பிற்குரியன என்று கோவா தலத் திருஅவை கூறியுள்ளது. அண்மையில்
நடைபெற்ற கோவா மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானபின், அங்குள்ள கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியக்
கல்லறைகள் பல சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சேதங்களை உருவாகியவர்களைக் கண்டுபிடிக்கும்
தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இதனால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும்
எதிர் வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கோவா முதல் அமைச்சர் Manohar Parrikar வேண்டுகோள்
விடுத்துள்ளார். மத உணர்வுகளைப் புண்படுத்தும் இந்தச் செயல்களை வன்மையாகக் கண்டித்துள்ள
கோவா தலத் திருஅவை, மக்களை அமைதி காக்கும்படியும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அரசு
உடனடியாகச் செயல் படும்படியும் கேட்டுள்ளது.