அகில உலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட உள்ள ஆலய மணி திருத்தந்தையிடம்
கொடுக்கப்பட்டது
மார்ச்,14,2012. இவ்வாண்டு ஜூன் மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற உள்ள 50வது
அகில உலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட உள்ள ஆலய மணி ஒன்று இப்புதன்
பொது மறைபோதகத்தின்போது திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது. பேராயர் Diarmuid Martin
தலைமையில், திருநற்கருணை மாநாட்டின் முன்னேற்பாடுகளை செய்து வரும் குழுவை இப்புதன் மறைபோதகத்தின்போது
சந்தித்தத் திருத்தந்தை, திருநற்கருணை மாநாட்டிற்கு அனைத்து மக்களையும் அழைக்கும் அடையாளமாக,
தன்னிடம் வழங்கப்பட்ட இந்த ஆலய மணியை அடித்தார். 2011ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி, அயர்லாந்து
நாட்டின் பாதுகாவலாரான புனித பேட்ரிக் திருநாளன்று டப்ளின் நகரில் இருந்து புறப்பட்ட
இந்த ஆலய மணி, இதுவரை அயர்லாந்தின் 26 மறைமாவட்டங்களில் பயணித்துள்ளது. மேலும், செப்டம்பர்
மாதம் இந்த மணி பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரையும் சென்றடைந்தது. தற்போது உரோம் நகர்
வந்துள்ள இந்த ஆலய மணி, மார்ச் 17ம் தேதி, வருகிற சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள புனித
பேட்ரிக் திருநாள் வரை இந்நகரில் ஒரு சில ஆலயங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.