ஒன்றிப்பை நோக்கி உழைக்க கர்தினால் ஆலஞ்சேரி அழைப்பு
மார்ச்,12,2012. இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல ஒவ்வோர் இந்தியனும்
ஒன்றிப்பிற்காக தீவிரமாக உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்தியாவின் புதிய கர்தினால்
ஜார்ஜ் ஆலஞ்சேரி. கொச்சியின் புனித கன்னிமரி பேராலயத்தில் தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு
நிகழ்ச்சியில் உரையாற்றிய கர்தினால் ஆலஞ்சேரி, எல்லா மதங்களுக்கும் மையப்பொருளாக இருக்கும்
உண்மை என்பது உயர்வாக மதிக்கப்படுவதுடன், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் வழி அதற்கு
உயர்வான இடம் வழங்கப்படவேண்டும் என்றார். பன்முக நிலைகளால் வளப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவில்
ஒவ்வொருவரும் ஒன்றிப்பை நோக்கி உழைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும்
என்றார் கர்தினால். நாட்டில் காணப்படும் சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகள் எவரையும்
பிரிக்கக்கூடாது, ஏனெனில் அனைவரையும் இணைக்கவல்ல பொது விடயங்கள் நிறையவே உள்ளன என மேலும்
உரைத்தார் கர்தினால் ஆலஞ்சேரி. புதிய கர்தினாலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்,
இந்தியாவிற்கான திருப்பீடத்தூதுவர் சல்வத்தோரே பென்னாக்கியோ, வேராப்பொளி பேராயர் பிரான்சிஸ்
கல்லறக்கல், திருவல்லா பேராயர் தாமஸ் மார் குரிலோஸ் உட்பட ஏறத்தாழ 40 ஆயர்களும், அரசு
சார்பில் அமைச்சர்கள் கே.வி. தாமஸ் மற்றும் கே. பாபுவும் கலந்து கொண்டனர்.