மார்ச் 10,2012. கடற்கரையை அண்டி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை, பாதி அளவாகக் குறைந்து
வருவதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. மோசமாக அழிவடைந்து வரும் விலங்கினங்களின்
பட்டியலின் உச்சத்தில் இந்தப் பறவையினங்களில் 28 விழுக்காடு இருப்பதாக, Bird Conservation
International என்ற பறவைகள் பற்றிய இதழில் வெளியான ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச்
சேர்நத பறவையினங்களே வேகமாக அழிந்து வருவதாக பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும் வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள்
போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு
காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் நலவாழ்வை
உறுதி செய்வதற்கும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்தக் கடல்சார்
பறவைகள் மிகவும் அவசியமானவை. ஆனால் உலகின் மொத்தப் பறவையினங்களில் இவை வெறும் 3.5 விழுக்காடுதான்
எனவும் சொல்லப்படுகிறது. அடையாளம் காணப்பட்டுள்ள 346 வகையான கடல்சார் பறவையினங்களில்
47 விழுக்காட்டில் இந்த அழிவைக் காணமுடிவதாக கூறப்படுகிறது.